கூந்தல் பனை aka கித்துள்
நிலத்தாலும் மொழியாலும் வெறுபட்டோம் நாம்! ஈழத்தமிழன், இலங்கை தமிழன், மழையகத்தமிழன் என்றெல்லாம், இப்பிரிவினை அவ் இயற்கையிலும் இருந்தது உலர்வலையம், ஈரவலயம், கரையோரம், மலைநாடென்று, அப்படி எத்தனை கூறாக பிளவுற்று கிடந்தாலும் அவ்வியற்கை கொடுப்பதில் மட்டும் பாகுபாடு காட்டவே இல்லை.
இயற்கைக்கு நாம் யாவரும் அதையே நம்பி இருக்கும் மனிதர்கள் மட்டுமே அதனால்தான் பாரபச்சமின்றி உலர்வலையத்திற்கு பனையை தந்த இயற்கை ஈரவலயத்துக்கு கூந்தல் பனை அல்லது கித்துளை கொடுத்தது.
ஆனால் நாம் பனையை பாடிய, கொண்டாடிய அளவிற்கு கித்துளை கொண்டாட மறந்தாலும் பனைக்கு எவ்விதத்திலும் சளைத்ததல்ல இக்கூந்தல் பனை.
பனையை வாழ்வாதாரமாக கொண்டு மக்கள் சமூகங்கள் எவ்வாறு வாழ்ந்ததோ அதே போல் தான் கித்துளும் பலரின் வாழ்வாதாரமாக இருந்துள்ளது இன்று அந்நிலை மாறி அதன் அருமை பெருமைகளை இளம் தலைமுறைக்கு தெரியாமலேயே போய்விடுகிறது.

கித்துள் என்பது பனை குடும்பத்தை சேர்ந்த ஒரு தாவரவகையே. இது இந்தோ மலாய ஈரவலயத்திற்குரிய மலை பகுதிகளில் இயற்கையாக வளரக்கூடிய ஓர் தாவர இனமாகும் அதாவது இலங்கை, இந்தியா, மியண்மார், மற்றும் மலேசியாவை பூர்வீகமாக கொண்டது.
இம்மரம் ஐம்பதடிக்கு மேல் உயரக்கூடியது மற்றும் தண்டின் அகலமும் 30 சென்றிமீட்டர்களை தாண்டக்கூடியது. தண்டிலிருந்து வெளிவரும் அதன் பூ அவிழ்த்து விட்ட நீண்ட பெண்கூந்தலின் அமைப்பை கொண்டிருப்பதால் இதனை கூந்தற்பனை என்று அழைக்கப்படுகிறது.

பயன்கள்:
கித்துள் மஞ்சரியை கொண்டு பனைமரம், தென்னை மரம் போன்றவற்றில் எடுக்கக்கூடிய முறையில் பதனீர் உற்பத்தி செய்யலாம் அது உடல் உஷ்ணத்தை குறைகக்கூடிய அருமருந்து அதையே புளிக்கவைத்து குடிக்கும் போது மது மயக்கத்தை தரும் கள்ளாகிறது. பனை, தென்னை ஆகியவற்றில் தயாரிக்கப்படும் கள்ளைக்காட்டிலும் கித்துள் கள்ளு வீரியம் மிக்கது.
“கித்துள் கள்ளும், அவித்த மரவள்ளிக்கிழங்கும் இன்றைக்கும் இலங்கையின் பல கிராமங்களில் ராஜ போதை காரர்களின் பேவரிட் தான்.”
அடுத்ததாக கித்துள் பதனீரை காய்ச்சி தயாரிக்கும் கித்துள் பாகு அல்லது பாணி இனிப்பின் இன்னுமோர் ரகம் எனலாம், கித்துள் பாணிக்கும் ரொட்டிக்கும் இன்னும் பல 90 கிட்ஸ்களின் நா அடிமையே, அதைவிடவும் தயிருடன் கித்துள் பாணி என்பது ஒரு பிராண்ட் ஆகவே மாறி விட்டது, தயிறு விற்பனை செய்யும் இடங்களில் கித்துள் பாணி பொதுவாகவே இருக்கும் உண்மையிலேயே கித்துள் பாணியை விற்பனை செய்பவன் தயிரை வைத்து வாடிக்கையாளரின் ஆசையை தூண்டி பாணி விற்பனை செய்யும் ஒரு யுக்தி அது. உண்மையிலேயே அம்பாறை, கந்தளாய் பகுதிகளில் கிடைக்கும் தயிறு மற்றும் சீனி கலப்படம் இல்லாத கித்துள் பாணி ஆகிய இரண்டின் கலவை என்பது அள்ளி அள்ளி பருக்கவேண்டிய அமிர்தமட!
கித்துளின் அடுத்த உபயம் கருப்பட்டி. கித்துள் பாணிக்கு காய்ச்சும் அதே பதனீரை பாணியை விடவும் சற்று அதிகமாக சூடாக்கி அதன் நீர்த்தன்மையை நன்றாக குறையும் வரை சுண்டவிட்டு தேங்காய் சிரட்டைகளில் ஊற்றி ஆறவிட்ட பின் கிடைப்பது கித்துள் கருப்பட்டி. இக்கருப்பட்டி சீனிக்கான ஒர் சிறந்த மாற்றுப்பொருள் ஆகும். ஏன் இது சீனிக்கான மாற்றுப்பொருளாக பாவிக்கப்படுகிறது என்றால் இது ஒரு குறைந்த கிளைசெமிக் குறியீடு (Low Glycemic Index –GI) உடைய இனிப்பாகும், அதாவது கித்துள் கருப்பட்டி நம் இரத்தத்தின் சக்கரை அளவை சீனியை போல் அல்லாது மெதுவாகவே உயர்த்தும். இதில் உள்ள இயற்கை சக்கரை மெதுவாகவே ஜீரணமாவதால் உடலுக்கு மெதுவாகவே சக்தியை பிறப்பிக்கும், அதனால் இரத்ததில் சக்கரை நிலை ஒரு சமமாக இருக்கும். ஆகவே இனிப்பை விரும்பும் ஆனால் இனிப்பு பக்கம் செல்ல தடை விதிக்கப்பட்டவர்களுக்கு இக்கருப்பட்டி அளவோடு உபயோகிக்க உகந்தது.

குறிப்பு: மார்க்கெட்டில் சீனி கலப்படம் செய்யாத கித்துள் கருப்பட்டியை தேடிப்பெறுவது சற்றே கடினமான காரியம் தான், காரணம் அவ்வாறான கைத்தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைவு மற்றும் கித்துள் மரங்களை தொழில் முறையில் பயிரிடுவது குறைவு என்பதால் சந்தையின் கேள்விக்கு ஏற்ற வழங்களை கொடுக்க முடியாமையினால் சீனி கலப்படம் செய்யப்பட்ட கருப்பட்டிகளே அதிகம் சந்தையில் விற்கப்படுகிறது. அது மற்றும் இன்றி முழுக்க முழுக்க கித்துள் பயன்படுத்தி செய்யப்படும் கருப்பட்டி காற்றிற்கே கசியக்கூடும் தன்மையுடன் இருப்பதால் களஞ்சியப்படுத்தி விற்பனை செய்வதில் சாவால்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அடுத்ததாக கித்துள் மாவு, இவ்வுற்பத்தி சற்றே கடினமானது மற்றும் வரையறுக்கப்பட்ட ஒரு கைத்தொழிலாக கருதப்படுகிறது. காரணம் கித்துள் மா, கித்துள் மரத்தின் முற்றிய அடித்தண்டில் இருந்து பெறப்படுகிறது. முதிர்ந்த கித்துள் மரம் ஒன்று வெட்டப்பட்டதும் அதன் அடித்தண்டு பிளக்கப்பட்டு நடுவே இருக்கும் வெண்ணிற மரத்துண்டுகள் வெட்டி எடுக்கப்பட்டது அதை உரலிலிட்டு இடித்து நீருடன் கலந்து அவற்றை பிழிந்து துணி ஒன்றின் உதவியுடன் ஓர் மண்பானையில் வடித்து கிட்டத்தட்ட ஒருநாள் வைத்து அடியில் தேங்கும் மாவை மீண்டும் கிட்டத்தட்ட ஒரு வாரம் வெயிலில் நன்றாக உலர்த்தி அதை அரைத்து எடுத்துக்கொண்டால் கித்துள் மா ரெடி. பொதுவாக மரத்தின் முதிர்ச்சி மற்றும் பருமன் அடிப்படையில் ஒரு மரத்தில் இருந்து 5 முதல் 10 கிலோ கிராம் வரை மா எடுக்க முடியும் அதுவும் ஒரு மரத்தின் ஆயுள் முடியும் போது, அதுவும் ஒரு மரத்தில் ஒருமுறை மட்டுமே எடுக்கக்கூடியது என்பதால் இதன் விலை அதிகமாக இருப்பதுடன் கிடைப்பதும் அரிதே. இக்கித்துள் மா சத்துமிக்கதாக கருதப்படுகிறது, கித்துள் மாவை உபயோகித்து பிட்டு, கஞ்சி மற்றும் “கித்துள் தளபை” எனும் ஒருவகை அல்வா தயாரிக்கப்படும் அவ் அல்வா கித்துள் பாணியுடன் பரிமாறப்படும் அதன் சுவை “இது இன்னுமொரு அமிர்தமடா” என்றிருக்கும்.
இவ்வாறான இயற்கையின் கொடையை பாதுகாக்க மற்றும் பயன்படுத்த வேண்டும் என்பதே நம் கருத்து. கித்துள் உற்பத்திகளை ஊக்குவிக்கும் மற்றும் ஏற்றுமதி செய்யும் வேலைத்திட்டங்களும் அரசாங்கம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பு:உங்கள் வீட்டில் ஒரு கித்துள் மரம் இருப்பின் அதன் மூலம் பதனீர் இறக்கி பாணி, கருப்பட்டி ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யவும் முடியும். பதனீரை கள்ளாக்கி உங்கள் பாவனைக்கு எடுக்கவும் முடியும் ஆனால் கள்ளை விற்பனை செய்தால் கம்பி எண்ணவும் நேரிடும்!
இயற்கையை நேசிப்போம், இயற்கையோடு வாழ்வோம்.

Good information
Ugh, always a pain finding the right link to bet365. This linkvaobet365 site seems to update regularly. Hopefully, it saves me some headaches in the future! Definitely bookmarking linkvaobet365.